articles

img

மருந்து மாபியாக்களின் பிடியில் ரெம்டெசிவிர்.....

ரெம்டெசிவிர் குறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை தொற்றுநோயியல் மருத்துவர் தெளிவுபடுத்துகிறார். ரெம்டெசிவிர் மருந்து போல் கடுமையான மூச்சுத்திணறலை சீராக்கும்அல்ஜூமேப் மருந்தும் தாராளமாக கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மருந்து மாபியாக்களின் பிடியிலிருந்து மருந்து வணிகத்தை மீட்க வேண்டும். இது தான் கொரோனா பிடியில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுவதற்கு சரியான வழி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.மனித நுரையீரல்  ஒரு ஜோடிபெரிய பஞ்சுபோன்ற, காற்று நிரப்பப்பட்ட உறுப்பு. இது மார்பின் இருபுறமும் (தோராக்ஸ்) அமைந்துள்ளது. சாதாரணமாக உள்ள ஒரு மனிதருக்கு தொற்று பரவும் போது அந்தத் தொற்று நுரையீரலுக்குள் சென்று ஒட்டிக் கொள்கிறது. அல்லது படர்கிறது. இதனால் நுரையீரலின் எடை அதிகரிக்கிறது. இதனால் நமக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது.மொத்த நுரையீரலின் கொள்ளளவு சராசரியாக ஆறு லிட்டர் தான். மிகவும் இழுத்து மூச்சுவிடும் போது காற்றின்அளவு ஐந்து லிட்டர்தான். எப்போதும்நுரையீரலுக்குள்ளே இருந்துகொண்டி ருக்கும் காற்றின் அளவு ஒரு லிட்டர்.

ரெம்டெசிவிர் என்ன செய்கிறது?
ரெம்டெசிவிர் குறித்து  மருந்து விற்பனைப் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், “ரெம்டெசிவிர் மருந்தை தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிக்கு செலுத்தும்போது நுரையீரலில் படர்ந்துள்ள தொற்றை அப்புறப்படுத்துகிறது. இதனால் மூச்சுவிடுதலில் ஏற்பட்ட சிரமம்தீர்க்கப்படுகிறது. கொரோனா தொற்றைப் பொறுத்தமட்டில் ரெடம்டெசிவிர்  நுரையீரலின் செயல்பாட்டை சீராக்குகிறது, அவ்வளவுதான். கொரோனா முழுமையாக குணமடையும் என்பதற்கு இந்த மருந்து தீர்வல்ல. இதன் மூலம் உயிரிழப்புகள் குறையும் என்பதற்கும் ஆதாரமில்லை.

தொற்றாளர்கள் அதிகரிப்பால் தட்டுப்பாடு
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் உற்பத்தி போதுமான அளவிற்கு இருந்தாலும் தொற்றுப் பாதிப்பாளர்கள் அதிகரித்து வருவதால் தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக  தமிழகத்தில் கடும் தட்டுப்பாடுஉள்ளது.  முன்பு அரசு மருத்துவமனை கள், தனியார் மருத்துவமனைகளில் ரெடம்டெசிவிர் சாதாரணமாகக் கிடைத்து வந்தது. இப்போது கார்ப்பரேட் மருத்துவமனைகளில் தேவைக்கு ஏற்ப கிடைக்கிறது. தவிர சிறிய-நடுத்தர மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை.  இதற்காக மக்கள் தினம்தோறும் சென்னையில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழக இதர மாவட்டங்களில் மக்கள் மருந்துக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்த மருந்துத் தட்டுப்பாட்டின் பின்னணியில் ‘‘டிரக்ஸ் மாபியாக்கள்’’ உள்ளன.  

வேறு மருந்தே இல்லையா?
ரெம்டெசிவிர் தவிர வேறு மருந்தே இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது.இதற்கு நிகரான மருந்தை பெங்களூருவில் உள்ள பயோகான் நிறுவனம் தயாரிக்கிறது அது (ITOLIZUMAB) இட்டோலி ஜூமேப். வர்த்தகப் பெயர் அல்ஜூமேப்  (alzumab). இது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மருந்து கொரோனா அலையின் இரண்டாவது, மூன்றாவது நிலைக்கு (கடுமையான மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கு) பயன்படும். இந்த மருந்தின் விலை (25 மில்லி கிராம்) ரூ.7,500 மட்டுமே.  இதன் தேவை அதிகரித்துள்ள தால் இது பல கைகள் மாறி நோயாளி யின் கையில் கிடைக்கும் போது இது ரூ.38-ஆயிரம் வரை விற்கப்படுகிறது.ரெடம்டெசிவிர் வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. பயோகான் தயாரிக்கும் மருந்து உயிரி தொழில் நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்படுகிறது.  

ரெம்டெசிவிர் - பீதி தேவையில்லை
உலக சுகாதார மையம் ரெம்டெசிவிர் மருந்து கொரோனா சிகிச்சைக்கு மிகமுக்கியமான மருந்து என்று சொல்லவில்லை. அதுபோல ரெம்டெசிவிர் மருந்து கொரோனா உயிர்சேதத்தைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ரெம்டெசிவிர் இல்லாமலேயே கொரோனா நோயாளிகளை சிறப்பாக குணப்படுத்திவருகிறோம். ரெம்டெசிவிர் நல்ல மருந்துதான், ஆனால் ஸ்டீராய்டு அளவுக்கு முக்கியமான மருந்து இல்லை. இந்த மருந்துக்காக மக்களிடம் பீதியை உருவாக்கவேண்டிய தேவை இல்லை என்கிறார் தொற்றுநோய் மருத்து நிபுணர் சுப்பிரமணியன்.

ரெம்டெசிவிர் மருந்து குறைந்த நோய் அறிகுறிகளுடன், ஆக்சிஜன் தேவைப்படாத நோயாளிகள் அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு பயன் தராது. அதேபோல மிகவும்  அதிக பாதிப்புடன் வெண்டிலேட்டரில் உள்ளநோயாளிகளுக்கும் இந்த மருந்து தேவைபடாது. ஆக்சிஜன் செலுத்தும்போது சிலருக்கு மட்டும்  தேவைப்படலாம். எனவே இது குறித்து மக்கள் பயப்படவே தேவையில்லை. மத்திய சுகாதார அமைச்சகம் தனது ரெம்டெசிவிர் மற்றும் கொரோனா மருந்துகள் பற்றிய வழிகாட்டுதல்களை ஜூலை 2020-க்கு பிறகு புதுப்பிக்கவே இல்லை என்கிறார் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் சுப்பிரமணியன்.

;